தமிழ்நாடு
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க எதிர்ப்பு: சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல்!
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்காதவர்கள் மின் கட்டணம் கட்டணம் செலுத்த முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வரும் 31-ஆம் தேதி தான் கடைசி தேதி என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வில்லை என்றால் ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்த முடியாது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது ஏன்? என்ற காரணத்தை கூறாமல் தமிழக அரசு மின் இணைப்பு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி வருவதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
மேலும் இந்த இணைப்பு காரணமாக 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினாலும் அனைத்து மின் இணைப்பு எண்களும் ஆதாரும் இணைக்கப்பட்ட பின்னர் ஒரு சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் வேறுவழியின்றி தமிழக அரசு உத்தரவின் காரணமாக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மின் – ஆதார் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க இணைக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு இதுகுறித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.