தமிழ்நாடு
கோவை சின்மயா பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு: காவல்துறை அதிரடி
கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில் பள்ளி முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்த நிலையில் முதல்வர் மீரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கோவையை சேர்ந்த சின்மயா வித்யாலயா என்ற பள்ளி மாணவி ஒருவருக்கு அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அந்த மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி முதல்வர் மீராவிடம் இதுகுறித்து கூறியுள்ளதாகவும் ஆனால் மீரா அவரை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும், குறிப்பாக பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்று கூறியதோடு பெற்றோருக்கு தெரியாமலேயே கவுன்சிலிங்கில் அனுப்பி உள்ளார்.
இதனையடுத்து பள்ளி முதல்வரும் குற்றவாளிகளில் ஒருவர் என்றும் அவரையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி கோவை சின்மயா வித்யாலயா பள்ளி முதல்வர் மீரா மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடம் தீவிர விசாரணை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.