தமிழ்நாடு
மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு: விரைவில் கைதா?
நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் காமெடி நடிகர் விவேக் காலமானபோது நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். கொரோனா தடுப்பூசிக்கு மக்களுக்கு தேவை இல்லை என்றும் இதுவரை உலகத்தில் கொரோனா என்பதே இல்லை என்றும், கொரோனா என்று கூறி அரசியல்வாதிகள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கொரோனா தடுப்பூசி யார் கேட்டது? என்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
இதனை அடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய மன்சூர் அலிகான் மீது புகார் அளிக்கப்படும் என்று கூறியிருந்தா.ர் இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஸ் என்பவர் மன்சூர் அலிகான் மீது புகார் அளித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் மன்சூரலிகான் நேற்று ’தான் தடுப்பூசி போட வேண்டாம் என்று சொல்லவில்லை’ என்றும் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.