தமிழ்நாடு
மின்சார வாரிய வேலை உள்பட அனைத்து பணிகளும் டி.என்.பி.எஸ்.சி மூலம்: மசோதா நிறைவேற்றம்!
மின்சார வாரியம், போக்குவரத்து வாரியம் உள்பட அனைத்து பணிகளும் இனி டிஎன்பிஎஸ்சி மூலமே எடுக்கப்படும் என புதிய சட்ட திருத்த மசோதா சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது ஒரு சில அரசு பணிகளுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்கள் எடுக்கப்படுகிறது என்பதும் மற்ற பணிகளுக்கு அந்தந்த வாரியத்தின் மூலமே ஆட்கள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி மூலம் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு பணியில் உள்ள வேலைவாய்ப்புகளின் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என கோரிக்கை பல வருடங்களாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இனிமேல் டிஎன்பிஎஸ்சி மூலம் மட்டுமே அனைத்து பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்படும் என்ற சட்டத் திருத்த மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தமிழக அரசின் மின்சார வாரியம், போக்குவரத்து கழகம், ஆவின் வாரியம், வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் காலியிடங்கள் இனிமேல் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்றும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு பலவகை வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளன என்பது குறிபிடத்தக்கது.