தமிழ்நாடு
டிடிவி தினகரன் அதிமுக வாக்குகளை நிச்சயம் பிரிப்பார்: செம்மலை அதிரடி பேட்டி!
இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தான் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது டிடிவி தினகரன் தப்புக்கு தேர்தல் நெருங்கியுள்ள இந்த சூழ்நிலையில் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து அதிமுக எம்எல்ஏ செம்மலை டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பின்னர் பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், இந்த தீர்ப்பு எதிர்பார்த்த தீர்ப்புதான் எனவும் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பல்வேறு விஷயங்களை பேசிய செம்மலையிடம் வரும் மக்களவை தேர்தலில் டிடிவி தினகரன் அதிமுகவின் வாக்குகளை பிரிப்பார் என கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், எங்களுடைய வாக்குகளை அவர் பிரிப்பார் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதைத்தான் நான் சொல்கிறேன், இது ஜெயலலிதாவுக்கு செய்கிற மாபெரும் துரோகம் என்றார்.
மேலும் ஜெயலலிதா வழிநடத்திய இயக்கம் தோற்க வேண்டும் என்று அவர் செயல்பட்டு வாக்குகளை பிரிப்பாரேயானால் ஜெயலலிதாவுக்கு அவர் செய்கிற மிகப்பெரும் துரோகம் அது. இந்த துரோகத்தை தொடர்ந்து செய்து வருகிறார் தினகரன். ஜெயலலிதாவின் ஆன்மா நிச்சயமாக தினகரனை மன்னிக்காது, ஏதாவது ஒரு வகையில் தண்டிக்கும் என்றார் செம்மலை.