தமிழ்நாடு
1,50,000 குடும்பங்கள் காக்கப்பட்டு உள்ளது.. நெகிழ்ந்து போன ஸ்டாலின்.. ஆஹா சிறப்பான சாதனை
சென்னை: 1,50,000 குடும்பங்கள் காக்கப்பட்ட நெகிழ்வோடு பகிர்கிறேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மைக் காக்கும் 48 திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்திடும் நோக்கில் தமிழக அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம்.
இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவைத் தமிழக அரசே மேற்கொள்ளும் வகையில் “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48” திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன, என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த திட்டம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் செய்துள்ள போஸ்டில், சொன்னதைச் செய்வோம்! சொல்லாமலும் செய்வோம்!
Golden Hours-இல் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென #இன்னுயிர்காப்போம் திட்டம் தொடங்கினோம். இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-வது பேராகப் பயனடைந்துள்ளார்.
அத்தனை குடும்பங்கள் காக்கப்பட்ட நெகிழ்வோடு பகிர்கிறேன், என்று பெருமையுடன் குறிப்பிட்டு உள்ளார்..