இந்தியா
இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்: சமாதானத்துக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்!
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் பலியாகினர். இந்த தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் அமைப்பு.
இதனையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. பாகிஸ்தானை மிகவும் விருப்பமான நாடுகள் பட்டியலில் இருந்து விலக்கியுள்ளது. பாகிஸ்தான் பொருட்களை இறக்குமதி செய்ய 200 சதவீதம் வரி விதித்துள்ளது. மேலும் உலக நாடுகள் பலவும் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
மேலும் இந்தியாவின் நட்பு நாடான பிரான்ஸ் ஐநாவில் இந்தியாவுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானம் பலத்த ஆதரவுடன் நிறைவேறியது. வழக்கமாக பாகிஸ்தானுக்கு ஆதராவாக இருக்கும் சீனா கூட இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இந்நிலையில் பாக்கிஸ்தான் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அதற்கு நம்பகத்தனமான ஆதாரத்தை வழங்கினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குச் சமாதானத்தை ஒரு வாய்ப்பாக கொடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.