விளையாட்டு
பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி மறுப்பு: இந்தியாவை கடுமையாக சாடிய ஒலிம்பிக் கமிட்டி!
![Gun - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/02/Gun.jpg)
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் துப்பாக்கிச் சுடுதலுக்கான உலகக்கோப்பை போட்டிகள் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பாகிஸ்தான் வீரர்கள் ஜி.எம்.பஷீர், கலில் அகமது ஆகியோருக்கு விசா வழங்க இந்தியா மறுத்துவிட்டது. இதனையடுத்து இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள ஒலிம்பிக் அமைப்பு இந்தியாவை கடுமையாக சாடியுள்ளது.
வருங்காலத்தில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவது குறித்து இந்தியாவுடன் நடைபெறவிருந்த எல்லா பேச்சுவார்த்தைகளையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரத்து செய்துள்ளது. மேலும் டெல்லியில் நடைபெறும் போட்டிகளில் ஆண்களுக்கான 5 மீட்டர் ரேபிட் ஃபயர் சுற்றில் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட ஒலிம்பிக் தகுதியையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திரும்பப் பெற்றுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, இந்திய ஒலிம்பிக் கமிட்டியுடனும், இந்திய அரசு அதிகாரிகளுடனும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கமிட்டியும் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தியது. பெரும் முயற்சி மேற்கொண்டும் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் போட்டியிடுவதற்கு இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.