தமிழ்நாடு
உதயநிதி-மோடி சந்திப்பில் கருத்து வேறுபாடு: நாங்கள் சட்டப்போராட்டம் நடத்துவோம்!
தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக அரசு முறை பயனமாக டெல்லி சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
உதயநிதிக்கு நேற்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் 5 மணியளவில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, தமிழகம் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள், நீட் தேர்வு விவகாரம், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவது போன்ற பல கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினார்.
இதில் நீட் விவகாரத்தை உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியபோது அதில் பிரதமர் மோடிக்கு மாறுபட்ட கருத்து இருந்ததால் அவர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் தனது மாறுபட்ட கருத்தையும் அவரிடம் கூறியுள்ளார் என்பது அவரது செய்தியாளர் சந்திப்பின் போது கூறியவற்றை வைத்த யூகிக்க முடிகிறது.
நீட் விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நீட் விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் பேசினேன். அவர் சில விளக்கங்களை அளித்தார். அப்போது நான், தமிழக மக்களின் மனநிலை இதுதான். அதைச் சொல்ல வேண்டியது கடமை என்றும், தொடர்ந்து திமுகவின் சார்பில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தேன் என கூறினார். இதனை பார்க்கும் போது இந்த சந்திப்பின் போது நீட் விவகாரத்தில் பிரதமருக்கும் அமைச்சர் உதயநிதிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது என்பதை யூகிக்க முடிகிறது.