தமிழ்நாடு
அதிமுக என்ன பழனிசாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சியா? கொந்தளித்த ஓபிஎஸ்!
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்து ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை எடப்பாடி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் தற்போது தான் ஓபிஎஸ் தரப்பு இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், நாங்கள் மக்களை நாடி செல்வோம். மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்து கொடுத்த சட்டவிதியை காப்பாற்ற போராடுகிறோம். அம்மா தான் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர். இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கம். இன்று வரை அப்படித்தான் இருந்தது.
ஆனால் தற்போது கூவத்தூரில் எப்படி நடந்ததோ அதுபோன்று கட்சியை கைப்பற்றியிருக்கிறார்கள். அதிமுக என்பது ஓபிஎஸ் தாத்தா மாடசாமி தேவராஜ் ஆரம்பித்த கட்சியோ, எடப்பாடி பழனிசாமி தாத்தா ஆரம்பித்த கட்சியோ இல்லை. பன்னீரை, தினகரனை, சசிகலாவை எந்த காரணத்தைக் கொண்டும் கட்சியில் சேர்க்கமாட்டோம் என்கிறார் எடப்பாடி. இது என்ன இவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா? இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. ஆணவத்தில் இருக்கிறார். ஆணவத்தை அடக்குகிற சக்தி, தொண்டர்களிடமும் மக்களிடமும் இருக்கிறது என்றார் அவர்.