கிரிக்கெட்
டி-20 மகளிர் உலகக்கோப்பை: அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை இந்திய மகளிர் அணி நேற்று சந்தித்தனர். பரபரப்பான இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
கேப்டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிறப்பாக விளையாடிய அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அந்த அணியில் களமிறங்கிய அத்தனை வீரார்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிகபட்சமாக பெத் மூனி 37 பந்துகளில் 54 ரன்களும், கேப்டன் மெக் லென்னிங் 34 பந்துகளில் 49 ரன்களும் விளாசினர். இந்தியா தரப்பில் ஷிகா பாண்டே 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்கை நோக்கிய களமிறங்கியது இந்திய மகளிர் அணி. முக்கியமான இந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் கைகொடுக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அதிரடி ஆட்டக்காரர் ஸ்மிரிதி மந்தனா 2 ரன்னில் நடையை கட்டினார். 28 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ஜெமிமா ரோட்ரிகஸ், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஜோடி தூக்கி நிறுத்தி வெற்றி பாதையை காட்டினர்.
ஆனால் அவர்கள் விக்கெட்டை இழந்த பின்னர் மீண்டும் ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. ஜெமிமா ரோட்ட்ரிகஸ் 24 பந்துகளில் 43 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 34 பந்துகளில் 52 ரன்கள் விளாசி ரன் ஆவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து இந்திய அணி வெற்றிக்கு கடினமாக போராடியும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. பரபரப்பான இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 167 ரன்களை எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.