தமிழ்நாடு
நரபலி அச்சம்: இளம்பெண்ணுக்கு பாதுகாப்பை உறுதிசெய்த நீதிமன்றம்!
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா என்ற பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னுடைய வளர்ப்பு தாய் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளதால் அதிலிருந்து காப்பாற்ற கோரிக்கை வைத்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் போலீஸ் தரப்பு இளம்பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க உறுதி அளித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர் முதுகலை பட்டதாரி ஷாலினி ஷர்மா. இவரது வளர்ப்பு தாய் சுதா ஷர்மா, மாந்திரீகங்களிலும் மூட நம்பிக்கைகளிலும் அதீத நம்பிக்கை கொண்டவர். இவர் இளம்பெண் ஷாலினி ஷர்மாவை நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே ஷாலினியின் பத்து வயது சகோதரன் உட்பட மூன்று பேரை நரபலி கொடுத்துள்ளார்.
இவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதால் போலீசில் புகாரளிக்கு யாருக்கும் தைரியம் இல்லை. இதனால் தனது உயிருக்கு பயந்த ஷாலினி ஏபிவிபி அமைப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு சட்டக்கல்லூரி மாணவி ஒருவரின் ஆலோசனையின் பேரில் தமிழகத்துக்கு வந்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்பதால் இங்கு வந்ததாக கூறுகிறார் அவர்.
தமிழகம் வந்துள்ள என்னை குடும்பத்தினரும், ஏபிவிபி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று நரபலி கொடுத்துவிடுவார்கள் என்று அச்சப்படும் அவர், தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை இன்று நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது 21-ஆம் நூற்றாண்டிலும் பில்லி சூனியம், மாந்திரீகம் போன்றவற்றை நம்பி நரபலி கொடுக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறிய நீதிபதி, ஷாலினி ஷர்மாவின் பெற்றோர் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யவும், இந்த புகார் குறித்து போபால் காவல் ஆணையர் பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் போலீஸ் தரப்பில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது.