தமிழ்நாடு
விரைவில் அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல்: கே.பி.முனுசாமி
அதிமுகவில் ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அந்த பொதுக்குழு செல்லும் என அறிவித்தது உச்சநீதிமன்றம் இன்று. இதனையடுத்து தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இதனை இனிப்பு கொடுத்து, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து அடுத்ததாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து அதிமுகவின் கே.பி.முனுசாமி ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த வெற்றி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் எதிரொலிக்கும். தென்னரசின் வெற்றி எடப்பாடி பழனிசாமியின் வெற்றி. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தென்னரசு வெற்றி பெறுவார்.
முதல்வர் ஸ்டாலின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இந்த கட்சி இல்லை. எங்கிருக்கிறது என்று கேட்டார். காங்கிரஸ் தலைவரும் கேட்டார். அவர்களுக்கு எல்லாம் இந்த தீர்ப்பு பதில் அளிக்கும் வகையில் உள்ளது. விரைவில் அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என்றார். மேலும் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோர் செய்ய நினைத்ததை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்வார் என்றும் தெரிவித்தார்.