கிரிக்கெட்
மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா?
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் B பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. அரையிறுதியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை இந்திய மகளிர் சந்திக்க உள்ளனர்.
இந்தியா-அயர்லாந்து லீக் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் இந்திய அணி டி.எல்.எஸ் விதிப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்துள்ளன.
வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. லீக் சுற்றுகளில் அபாரமாக விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. இந்திய அணி லீக் சுற்றில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. அதே நேரத்தில் இரு அணி வீரர்களும் பலம்வாய்ந்தவர்களாகவே உள்ளனர்.
இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 149 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி 146 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார். பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் இரண்டாம் இடத்திலும் இந்தியாவின் ரேனுகா தாக்கூர் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். பலம்வாய்ந்த இரண்டு அணிகளும் அரையிறுதியில் மோத உள்ள நிலையில் இந்த ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.