வணிகம்
ஃப்ரெஷர்கள் அதிர்ச்சி.. சம்பளத்தைப் பாதியாகக் குறைத்த விப்ரோ!
இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, ஃப்ரெஷர்கள் சம்பளத்தைப் பாதியாகக் குறைத்து அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஐடி, தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வரும் நிலையில், விப்ரோ நிறுவனம் ஃப்ரெஷர்களின் ஆண்டு சம்பளத்தை 6.5 லட்சத்திலிருந்து 3.5 லட்சம் ரூபாயாகக் குறைத்து அறிவித்துள்ளது.
ஏற்கனவே 2022-ம் ஆண்டு வளாக நேர்காணல் மூலம் ஊழியர்களைத் தேர்வு செய்த விப்ரோ நிறுவனம், அவர்களுக்கான பணி ஆனையை வழங்குவதில் தாமதம் செய்து வந்தது.
இப்போது பிப்ரவரி 16-ம் தேதி பணிக்கு எடுக்கப்பட்டுள்ள ஃப்ரெஷர்களுக்கு சம்பளத்தை 6.5 லட்சம் ரூபாயிலிருந்து 3.5 லட்சம் ரூபாயாகக் குறைத்துக்கொள்ள விருப்பம் இருந்தால் தெரிவிக்குமாறு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
எங்கள் தொழில்துறையில் உள்ள மற்றவர்களைப் போலவே, உலகளாவிய பொருளாதாரங்கள் மற்றும் வாடிக்கையாளர் தேவைகளை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகிறோம். இது எங்கள் ஊழியர்கள் பணிக்கு எடுக்கும் திட்டத்திலும் முக்கிய முடிவுகளை எடுக்க வைத்துள்ளது.
தற்போது ஊழியர்கள் பணிக்கும் எடுக்கும் போது சம்பளத்தை 3.5 லட்சமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அர்ப்பணிப்பு மற்றும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம் என அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னஞ்சலை நீங்கள் ஏற்றால், உங்களது முந்தைய சம்பள விகிதங்கள் செல்லாது. இந்த வாய்ப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நாங்கள் நம்புகிறோம்.
இதனை ஏற்க விரும்பவில்லை என்றால் அவர்கள் அசல் வேலைக்காண பணியாணை பெறுவதில் மேலும் தாமதமாகும் ஆகும். காத்திருப்பில் இருக்க வேண்டும் எனவும் விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.