இந்தியா
ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்கலாம்.. யுஜிசி அதிரடி அறிவிப்பு..!
ஒரே நேரத்தில் மாணவர்கள் விரும்பினால் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்கலாம் என பல்கலைக்கழக மானிய குழு என்ற யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒரு பட்டப் படிப்பு மட்டுமே படிக்கும் வசதி இருக்கும் நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை படிக்கலாம் என்றும் ஒரு பட்டப் படிப்பை ரெகுலர் கல்லூரியிலும் இன்னொரு பட்டப் படிப்பை தொலைதூர கல்வியிலும் படிக்கலாம் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பில் புதிய கல்வி ஆண்டிலிருந்து மாணவர்கள் இரண்டு படிப்புகளை ஒன்றாக தொடரலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் மாணவர்கள் இரண்டு படிப்புகளிலும் இன்டர்ன்ஷிப் கட்டாயம் செய்ய வேண்டும் என்றும் யுஜிசி தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதிய மாணவர்கள் இன்டர்ன்ஷிப் அடிப்படையில் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் மாணவர்கள் மிக எளிதாக வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் சமூக நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்றும் வணிக நிறுவனங்களிடம் இன்டர்ன்ஷிப் படிப்பதன் மூலம் அவர்கள் அனுபவத்தை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்பு படிக்கும் மாணவர்கள் சான்றிதழ் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளையும் ஒரே நேரத்தில் படிக்கலாம் என்றும் இதனால் மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
க்யூட் தகுதி தேர்வின் மூலம் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று ஏற்கனவே கல்வி அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது என்றும் 60க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வின் அடிப்படையில் தான் இளங்கலை படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இந்திய மொழிகளை ஊக்குவிக்க கல்வி அமைச்சகம் முன்வந்துள்ளது என்றும் இந்த பல்கலைக்கழகங்கள் ஒரே நேரத்தில் இரண்டு கல்வி படிப்புகளை நடத்துவதின் மூலம் சில வழிகாட்டுதலையும் அமைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகள் படித்தால் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் ஒரே வேலையை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த கல்வி ஆண்டு முதல் பல மாணவர்கள் ஒரே நேரத்தில் ரெகுலர் கல்லூரியில் ஒரு படிப்பையும் தொலைதூர படிப்பில் ஒரு படிப்பையும் படிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.