இந்தியா
வேலையில் இருந்து நீக்கப்பட்டீர்களா? எங்களிடம் வாங்க.. வேலை தருகிறோம்.. டிசிஎஸ் அறிவிப்பு..!
உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எங்களை அணுகலாம் என்றும் அவர்களுக்கு வேலை தர தயாராக இருக்கிறோம் என்றும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட், அமேசான், பிளிப்கார்ட், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக 2023 ஆம் ஆண்டு ஜனவரி பிறந்ததிலிருந்து சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபர கணக்கு ஒன்று தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கும் எந்த விதமான ஐடியாவும் இல்லை என்றும் நாங்கள் எங்கள் ஊழியர்களின் திறமையை வளர்க்கப் போவதாகவும் டிசிஎஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரி மிலிந்த் என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உலக அளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து வேலை இழந்தவர்களுக்கு நாங்கள் வேலை தர விரும்புவதாகவும் குறிப்பாக அமெரிக்காவில் ஹெச் ஒன் விசா வைத்திருப்பவர்களுக்கு வேலை தர திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வேலை இழந்த இந்தியர்கள் மாற்று வேலை கிடைக்காவிட்டால் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் அவர்களுக்கு வேலை கொடுக்க டிசிஎஸ் முன்வந்துள்ளது ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் ஏற்கனவே இருக்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளையும் அறிவிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் தற்போது 40 சதவீதம் வரை வாரத்திற்கு மூன்று முறை அலுவலகம் வந்து வேலை செய்கிறார்கள் என்றும் 60% பேர் வாரத்துக்கு இரண்டு முறை வருகிறார்கள் என்றும் கூறிய மனித வள மேம்பாட்டு துறை அதிகாரி இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.