உலகம்
மீண்டும் 7000 ஊழியர்கள் பணிநீக்கமா? என்ன நடக்குது ஃபேஸ்புக் நிறுவனத்தில்?
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 7000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு காரணமாக பெரிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், டுவிட்டர் உள்பட பல நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஒரு சில நிறுவனங்கள் இரண்டாவது சுற்று பணி நீக்க நடவடிக்கையும் எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே 11 ஆயிரம் ஊழியர்களை கடந்த நவம்பர் மாதம் வெளியேற்றிய ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது 7000 ஊழியர்கள் சரியாக பணி செய்யவில்லை என்ற கருத்துக்கணிப்பை எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த ஊழியர்கள் தாங்களாகவே வெளியேற வேண்டும் என மறைமுகமாக இந்த கருத்துக்கணிப்பு செய்தியை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து பலர் வேறு நிறுவனங்களில் வேலை தேடும் பணியை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. சரியாக ரேட்டிங் பெறாத ஊழியர்கள் தாங்களாக வெளியேறவில்லை என்றால் மீண்டும் ஒரு வேலைநீக்க நடவடிக்கை இருக்கும் என பேஸ்புக் நிறுவனத்தின் முன்னணி அதிகாரி ஒருவர் கூறியதாக கூறப்படுகிறது. எங்கள் நிறுவனத்தில் திறமை மிகுந்த ஊழியர்கள் மட்டுமே தேவை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.
எனவே ரேட்டிங்கில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் படிப்படியாக வெளியேறி வர வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு வெளியேறவிட்டால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.