உலகம்
ஆப்பிள் நிறுவனத்தால் நூற்றுக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயமா?
![apple - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/apple.webp)
கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்த வேலை நீக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் அதுமட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு ஆள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை முறித்துக் கொண்டு வருவதால் ஒப்பந்ததாரர்களிடம் பணி செய்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்ததாக கூறப்படுகிறது.
ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் நூற்றுக்கணக்கான ஒப்பந்ததாரர்களுடைய உறவை முறித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதே நேரத்தில் ஆப்பிள் நிறுவனம் நேரடியாக தனது ஊழியர்களை வேலை நீக்கம் செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டுள்ளது. எங்களுடைய ஒப்பந்ததாரர்களை நாங்கள் ஊழியர்களாக கருதவில்லை என்றும் எனவே பணிநீக்க நடவடிக்கையை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுவது தவறு என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் எந்தெந்த ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை முறித்துக் கொண்டது என்பது குறித்த தகவல் வெளியிடவில்லை என்றாலும் ஆயிரக்கணக்கான ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலர் வேலை வாய்ப்புகளை இழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒப்பந்ததாரர்களை குறைப்பதன் மூலம் செலவை குறைக்கலாம் என ஆப்பிள் நிறுவனம் கருதுகிறது என்றும் ஆனால் அதே நேரத்தில் தங்களுடைய ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்றும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் தங்களது ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டிய நிலை இதுவரை ஏற்படவில்லை என்றும் பணி நீக்கம் என்ற தவறான முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கூகுள் உள்பட பல நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் இந்த அறிவிப்பு அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.