தமிழ்நாடு
பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போதை ஆசாமி ஆசிரியர் கைது!
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 12 வயதான பள்ளி சிறுமிகளுக்கு மது போதைக்கு அடிமையான பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மாதவரம் பகுதியை சேர்ந்த 46 வயதான பிரேம் ஆனந்த் என்பவர் வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் கொடுங்கையூரை சேர்ந்த 12 வயதான இரண்டு சிறுமிகள் இவரது வீட்டிற்கு சென்று படித்து வந்தனர்.
இதனையடுத்து இரண்டு நாட்களாக ஆசிரியர் பிரேம் ஆனந்த் தங்களிடம் முறையற்று நடந்து கொள்வதாகவும், தவறான இடங்களில் கை வைத்து கிள்ளுவதாகவும், அடிப்பதாகவும் சிறுமிகள் தங்கள் வீட்டில் தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்தனர்.
இந்த விவகாரத்தில் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்குழு உறுப்பினரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் ஆசிரியர் பிரேம் ஆனந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மது போதைக்கு அடிமையானவர் என்பதும், சிறுமிகளிடம் கண்ட இடங்களில் கை வைத்து தவறாக நடந்துகொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.