தமிழ்நாடு
பிரபாகரன் டிஎன்ஏ சோதனையில்…. மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்திய பழ.நெடுமாறன்!
உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் சில தினங்களுக்கு முன்னர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வெளிப்படுவார் எனவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது தமிழகம், டெல்லி, இலங்கை என கடல் கடந்து பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் பிரபாகரனின் டிஎன்ஏ சோதனையில் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் பழ.நெடுமாறன்.
இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பழ.நெடுமாறன், இதற்கு முன்னர் பிரபாகரனை கொன்றுவிட்டதாக சிங்கள ராணுவம் 10 முறையாவது சொல்லி இருப்பார்கள். தமிழர்களின் மன உறுதியை குலைக்க இலங்கை ராணுவம் இவ்வாறு கூறி வருகிறது. அவரது உடலை அரை மணி நேரத்தில் டிஎன்ஏ சோதனை செய்ததாக சிங்கள ராணுவ தளபதி பொன்சேகா தெரிவித்தார். ஆனால் அவ்வாறு செய்ய வாய்ப்பே இல்லை. டிஎன்ஏ சோதனை செய்ய குறைந்தது நான்கு நாட்களாகும். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் டிஎன்ஏ சோதனை செய்யும் வசதி இல்லை.
மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றப்பத்திரிக்கையில் பிரபாகரன் பெயர் இன்னமும் உள்ளது. பொதுவாக ஒரு கொலை அல்லது கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால் மரண சான்றிதழ் கொடுத்து இறந்தவரின் பெயரை நீக்கிவிடுவார்கள். பிரபாகரனை கொன்றுவிட்டதாக கூறும் இலங்கை அரசு ஏன் இன்னமும் மரண சான்றிதழ் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் பழ.நெடுமாறன்.