உலகம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதாக வாய்ப்பு: தேர்தல் ஆணைய வழக்கில் அதிரடி!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் முன்ஜாமீன் தேர்தல் ஆணைய வழக்கில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வருகிறது.
பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் கட்சி நிதி விவரங்களை மறைத்ததாக அவரை தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்தது. இதனால் தனது பிரதமர் பதவியை இழந்தார் இம்ரான் கான். இதனையடுத்து நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து இம்மான் கான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அவர் இந்த வழக்கில் இடைக்கால ஜாமீனில் இருந்து வந்தார். இதனையடுத்து நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டுமென இம்ரான் கான் தரப்பில் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, போராட்டத்தின் போது இம்ரான் கானுக்கு துப்பாக்கி சூடு பட்டதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் உள்ளார். எனவே இடைக்கால ஜாமீனை நீட்டிக்க முடியாது, அதனை ரத்து செய்கிறேன், அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து இம்ரான் கான் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.