தமிழ்நாடு
பிபிசி வருமான வரித்துறை ரெய்டு: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
![Stalin - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/Stalin-3.jpg)
2002-ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது நடந்த குஜராத் கலவரம் குறித்து இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்று எடுத்து வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதித்த மத்திய அரசு, நேற்று டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனையை நடத்தின. இந்த ஆய்வு இன்றும் தொடர உள்ள நிலையில் இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
![BBC - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/BBC-1.jpg)
#image_title
குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்புக்கு பின் வெடித்த மதக்கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது அங்கு முதல்வராக மோடி இருந்தார். இந்நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான மோடி என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதித்த மத்திய அரசு, சமூகவலைதளங்களில் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி ஆய்வு நடத்தினர்.
இதனையடுத்து தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், ஒரு துடிப்பான ஜனநாயகத்திற்கு வெளிப்படையான, சுதந்திரமான நிறுவனங்கள் இன்றியமையாதவை. ஆனால் அத்தகைய மதிப்புமிக்க நிறுவனங்கள் பாஜக அரசின் கீழ் முற்றிலும் தனது சுதந்திரத்தை இழந்துள்ளன. அதில் தற்போது பிபிசி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனையும் சேர்ந்துள்ளது.
இந்தியாவின் ஜனநாயகத்தையும், பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் அழித்தவர்களை மக்கள் கவனமாக பர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு வரவிருக்கும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவும் ஊடகங்கள் மீதான தாக்குதல் இது என கண்டன தெரிவித்துள்ளது.