இந்தியா
புல்வாமா தாக்குதலில் பாஜக மற்றும் சித்தாந்த அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதாக பகீர் குற்றச்சாட்டு!
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் பாஜகவின் சதி என குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.
புல்வாமாவில் நடந்த பயங்கராவாத தாக்குதல் பாஜகவின் சதி என்று ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் அமைப்பின் மாநில தலைவர் அல்தாபி குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அல்தாபி, காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம், உண்மை குற்றவாளிகளை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த தாக்குதலில் பாஜக மற்றும் அதன் சித்தாந்த அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக எங்களது அமைப்பு சந்தேகிக்கிறது. பாதுகாப்புகள் நிறைந்த காஷ்மீரில், அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளின் உதவி இல்லாமல் இது போன்ற பெரிய தாக்குதலை நடத்த முடியாது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கலவரம் செய்யவும், வீழ்ந்து போன செல்வாக்கை நிலை நிறுத்தவும் பாஜகவால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலாக இதனை கருதுகிறோம். எனவே இதில் முறையான நீதி விசாரனை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து பாஜகவை குற்றம்சாட்டியுள்ளார்.