உலகம்
6 மீட்டர் வரை இடம்பெயர்ந்த துருக்கி: 17 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் 6-ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இந்த அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் துருக்கி 5 முதல் 6 மீட்டர் வரை இடம்பெயர்ந்திருக்கலாம் என இத்தாலிய நில அதிர்வு நிபுணர் பேராசிரியர் கார்லோ டோக்லியோனி கூறியுள்ளார்.
இந்த பயங்கர நிலநடுக்கத்தால் துருக்கியில் சீட்டுக்கட்டு போல கட்டிடங்கள் சரிந்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது உலக நாடுகளை கவலையளிக்க வைத்துள்ளது. துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டும் எனவும் அஞ்சப்படுகிறது.
துருக்கியை மீட்க அரசு கடும் முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில் உலக நாடுகள் பலவும் துருக்கிக்கு மீட்புப் படை மற்றும் நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்நிலையில் 100 ஆண்டுகளுக்குப்பிறகு அங்கு நிகழ்ந்துள்ள சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் குறித்து கூறிய இத்தாலிய நில அதிர்வு நிபுணர் பேராசிரியர் கார்லோ டோக்லியோனி துருக்கி மேற்கு நோக்கி சிரியாவுடன் ஒப்பிடும்போது ஐந்து முதல் ஆறு மீட்டர் வரை நழுவியிருக்கலாம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சிரியாவுடன் ஒப்பிடுகையில், மதிப்பீடுகளில் துருக்கி உண்மையில் ஐந்து முதல் ஆறு மீட்டர் வரை நழுவியுள்ளது. அரேபிய தட்டுக்கு தென்மேற்கு நோக்கி துருக்கி நகர்ந்தது போல் உள்ளது. துருக்கியைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அது அமர்ந்திருக்கும் டெக்டோனிக் தகடுகளை மூன்று அடி (10 மீட்டர்) வரை நகர்த்தியிருக்கலாம் என்று நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.