இந்தியா
காஷ்மீர் தாக்குதல்: உலக அரங்கில் பாகிஸ்தான் தனித்துவிடப்படும்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். உலக அரங்கில் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதனையடுத்து உலக அரங்கில் பாகிஸ்தான் தனித்துவிடப்படும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
காஷ்மீரில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ அமகது தீவரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் இதில் கலந்துகொண்ட அமைச்சர் அருண் ஜெட்லி.
அப்போது, இந்தக் கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல்கள் குறித்துப் பல விவாதங்கள் நடைபெற்றது, அனைத்தையும் வெளியில் பகிரமுடியாது. உலக அரங்கில் பாகிஸ்தானை தனித்து விட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளது.
புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மிகப்பெரிய விலையைக் கொடுப்பார்கள். பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தும் திரும்ப பெறப்படுகிறது என அருண் ஜெட்லி தெரிவித்தார். ஆனால் தங்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தன் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.