இந்தியா
பணிப்பெண்ணிடம் உதவி கேட்ட பெண் பயணியை விமானத்தில் இருந்து இறக்கிவிட்ட கொடூரம்.. என்ன நடந்தது?
விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் பணிப்பெண்ணிடம் உதவி கேட்டதை அடுத்து அந்த பெண் பயணி விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே விமானத்தில் நடக்கும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் போதை பயணி ஒருவர் பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்த விவகாரம் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த சம்பவத்தில் விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவர் தனது பையை மேலே வைக்க பணிப்பெண்ணிடம் உதவி கேட்டதால் அவர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இருந்து அமெரிக்கா செல்ல இருந்த பெண் பயணி ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்திருந்ததாகவும் அதனால் பலவீனமாக இருந்ததாகவும் தெரிகிறது. மீனாட்சி சென்குப்தா என்ற அந்த விமான பயணி தனது கையில் ஐந்து பவுண்டுக்கு மேல் எடை உள்ள பைப்பையை வைத்திருந்தார்.
விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்து அவருக்கு சக்கர நாற்காலி கொடுத்து விமானத்தில் ஏற உதவி செய்தனர். ஆனால் விமானத்திற்கு உள்தான் அவருக்கு பல அசெளகரியங்கள் ஏற்பட்டன. தனது இருக்கை அருகிலேயே அவர் தனது பையை வைத்திருந்த நிலையில் பணிப்பெண் ஒருவர் வந்து பையை கேபினில் வைக்குமாறு சொன்னார்.
அப்போது அந்த பெண் பயணி தன்னால் இந்த பையை தூக்க முடியாது என்றும் நீங்கள் உதவி செய்தால் கேபினில் வைத்து விடுகிறேன் என்றும் கூறினார்.. ஆனால் அதற்கு அந்த பணியாளர் அது தன்னுடைய வேலை அல்ல என்றும் உடனடியாக பையை வைக்க விட்டால் நீங்கள் விமானத்திலிருந்து இறங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதனை அடுத்து பெண் பயணி மீனாட்சி சென்குப்தா விமானத்தில் விதிகளை கடைபிடிக்கவில்லை என்று கூறி இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த விஷயம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் டெல்லி மகளிர் ஆணையம் ஆகியவற்றுக்கு மீனாட்சி சென்குப்தா புகார் அளித்துள்ளார்.