தமிழ்நாடு
ஆளுநர் மாளிகையில் குவிக்கப்பட்ட அதிரடிப்படை: புதுவையில் பதற்றம்!
புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை போடுவதாகவும், மக்கள் நலன் சார்ந்த கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றம் சாட்டுகிறார் நாரயணசாமி.
இதனையடுத்து நேற்று திடீரென போராட்டத்தில் இறங்கிய முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். அவரது தர்ணா இரண்டாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையின் முன்பு முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆளுநர் கிரண் பேடி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த போராட்டத்தில் முதல்வர் நாராயணிசாமியுடன், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எம்எல்ஏக்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, திமுக எம்எல்ஏ சிவா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இதனையடுத்து இன்று காலை ஆளுநர் மாளிகைக்கு அதிவிரைவுப்படை வரவழைக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் அதிவிரைவு அதிரடிப்படை, தொழில் பாதுகாப்பு படையை குவித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.