இந்தியா
துப்பாக்கி சூட்டில் கவலைக்கிடமாக இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் பலி.. ஒடிசாவில் பதட்டம்..!
ஒடிசாவில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் என்பவர் காவல்துறை அதிகாரி ஒருவரால் சரமாரியாக சுடப்பட்டதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சையின் பலன் இன்றி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநில முதலமைச்சர் நவின் பட்நாயக் அவர்களுக்கு அடுத்தபடியாக பவர்ஃபுல் அமைச்சர் என்று கூறப்படுபவர் சுகாதாரத் துறை அமைச்சர் நபா தாஸ். நேற்று ஒடிசாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தபோது திடீரென காவல் உதவி ஆய்வாளர் கோபால்தாஸ் என்பவர் தன்னிடம் இருந்து துப்பாக்கியை எடுத்து சரமாரியாக அமைச்சர் மீது சுட்டார்.
அவர் சுட்டதில் ஒரு குண்டு அமைச்சரின் மார்பில் பாய்ந்த நிலையில் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டு அதன் பிறகு ஹெலிகாப்டர் மூலம் புவனேஸ்வருக்கு கொண்டு செய்யப்பட்டது. அமைச்சரின் இருதயம், இடது நுரையீரல் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டதை அடுத்து ரத்தப்போக்கை நிறுத்த மருத்துவர்கள் போராடினார்கள்.
இந்த நிலையில் அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறிய நிலையில், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரை காப்பாற்ற தீவிரமாக போராடினார். காயங்கள் சரி செய்யப்பட்டு இதய செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் செய்தாலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தது. இந்த நிலையில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் நபாதாஸ் சுகிச்சையின் பலன் இன்றி உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக இது குறித்து விசாரணை செய்ய அவர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அமைச்சரின் மகன் மற்றும் அவர் குடும்பத்தார்களை நேரில் சந்தித்த முதலமைச்சரின் நவீன் பட்நாயக் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
கட்சிக்கு மட்டுமின்றி மாநிலத்திற்கும் அவர் ஒரு சொத்தாக இருந்தார் என்றும் அவரது மறைவு ஒரிசா மாநிலத்துக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் முதல்வர் அலுவலகம் இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் அமைச்சரை சுட்டுக் கொன்ற காவல் உதவி ஆய்வாளர் கோபால்தாஸ் ஏன் அமைச்சரை சுட்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை அமைச்சரை சுட்டதற்கான காரணத்தை கோபால்தாஸ் தெரிவிக்கவில்லை என்று விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.ஒடிஷா, சுகாதாரத்துறை, நபா தாஸ் ,