தமிழ்நாடு
சென்னையில் நில அதிர்வு: மக்கள் பீதியடைய வேண்டாம்!
சென்னையில் இன்று அதிகாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை பலரும் உணர்ந்துள்ளனர். இந்த நில அதிர்வு இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
சென்னையில் இருந்து 609 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் இந்த நில அதிர்வு மையம் கொண்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 4.9 ரிக்டர் அளவில் இருந்த இந்த நில அதிர்வு கேளம்பாக்கம், சைதாப்பேட்டை, டைடல் பார்க், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் எந்தவித பொருள் சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.
பொதுவாக இதுபோன்ற நில அதிர்வுகள் அந்தமான் நிகோபர் தீவுகளில் அடிக்கடி ஏற்படுவது உண்டு. ஆனால் தற்போது சென்னைக்கு அருகே நில அதிர்வு ஏற்பட்டு இருப்பது மக்களை பீதியடைய வைத்துள்ளது. மேலும் இந்த நில அதிர்வு காலை 7 மணி அளவிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இருந்தாலும் இதனால் சென்னைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பதால் யாரும் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.