இந்தியா
ஒரே நாளில் ரூ.7000 கோடி நஷ்டம்… உலக பணக்காரர் பட்டியலில் அதானிக்கு பின்னடைவு!
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான அதானி நிறுவனத்தின் பங்குகள் சரிந்த காரணத்தினால் ஒரே நாளில் 7000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் உலக பணக்காரர் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரரான அதானி நிறுவனங்களின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 872 மில்லியன் டாலர் சரிந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் அவரது நிறுவனங்களின் பங்குகள் சுமார் 7,118 கோடி ரூபாய் சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்னவே இந்த ஆண்டு அவருடைய சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் 7000 கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதானி நிறுவனங்களின் பங்குகள் இந்த ஆண்டு மட்டும் சுமார் 8 சதவீதம் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது குறிப்பாக அதான் என்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகிய இரண்டும் 13 சதவீதம் சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதானியை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஜெஃப் பெசோஸ் இப்போது உலகின் மூன்றாவது பணக்காரராக உள்ளார், முதல் இரண்டு பணக்காரர்கள் லூயிஸ் உய்ட்டனின் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் எலோன் மஸ்க் ஆகியோர் உள்ளனர்.
அதானி குழுமத்தின் தலைவராக இருக்கும் கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு தற்போது 119 பில்லியன் டாலர்களாக உள்ளது. கௌதம் அதானியின் நிகர மதிப்பு நேற்று 24 மணி நேரத்தில் 872 மில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்கட்டமைப்பு முதல் விமான நிலைய மேலாண்மை வரையிலும், FMCG முதல் சிமென்ட் வரையிலும் பரந்து விரிந்திருக்கும் அதானியின் வணிகம் வலுவான போட்டியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 13 மடங்கு உயர்ந்த நிலையில் தற்போது சொத்து மதிப்பு ஏறியது போலவே இறங்கியும் வருகிறது.