இந்தியா
வொர்க் ப்ரம் ஹோம் பணிக்கு உதவித்தொகை.. இன்னும் என்ன எல்லாம் பட்ஜெட்டில் இருக்கும்?
![Nirmala Sitharaman - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/Nirmala-Sitharaman-3.jpg)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடம் இருக்கும் நிலையில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பதாக வொர்க் ப்ரம் ஹோம் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு கூடுதல் உதவித்தொகை, 80சி விலக்கு உட்பட அடுக்கடுக்காக ஊழியர்களின் எதிர்பார்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது மீண்டும் சில நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் முறையை அமல்படுத்தியுள்ள நிலையில் அதற்கான கூடுதல் உதவி தொகையை ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல் 80 சி விலக்கையும் அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஊழியர்கள் மத்தியில் உள்ளது.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன் தாக்கல் செய்யப்படும் இறுதி பட்ஜெட் இது என்பதால் அதிகப்படியான சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அலுவலகம் சென்று வேலை செய்யும் ஊழியர்கள் மட்டுமின்றி வீட்டில் இருந்து பணி செய்யும் ஊழியர்களும் சில நிவாரணங்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த எதிர்பார்ப்பு நீளமானதாக இருந்தாலும் இவற்றில் பாதி நிறைவேறினால் கூட ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவையெல்லாம் நிறைவேறுமா என்பதை பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.
80சிக்கான வரம்பு நீண்ட காலமாக 1,50,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 80சிக்கான வரம்பு இன்றைய தேவையை பூர்த்தி செய்ய அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது குறைந்தபட்சம் ரூ 2,00,000 என மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.