கிரிக்கெட்
இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களை வென்றுள்ள நிலையில் இருபது ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இருபது ஓவர் போட்டியில் மோசமான தோல்வியை நியூசிலாந்து அணியிடம் சந்தித்த இந்திய அணி இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் இன்று நியூசிலாந்தை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவரில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிராண்ட்ஹோம் 28 பந்துகளில் 50 ரன்களையும், டெய்லர் 36 பந்துகளில் 42 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணியில் க்ரூனல் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அஹமத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 29 பந்துகளில் 50 ரன்களையும், ரிஷப் பண்ட் 28 பந்துகளில் 40 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. அடுத்து நடைபெற உள்ள மூன்றாவது இருபது ஓவர் போட்டியே தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும்.