தமிழ்நாடு
இந்தியா என்ற நாட்டிற்குள் இன்னொரு நாடு தேவையா? கவர்னரின் கருத்துக்கு பொங்கி எழுந்த திராவிட மாடல்!
தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்றும் இந்தியாவிற்குள் தமிழகமும் ஒரு அங்கம் என்பதால் இந்தியா என்ற நாட்டிற்குள் இன்னொரு நாடு தேவையா? என்றும் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘காசி தமிழ் சங்கம் வெற்றி பெற காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி என்றும் குறுகிய காலத்தில் சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் மட்டும் வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது என்றும் நாங்கள் திராவிடர்கள் என்று எல்லாவற்றுக்கும் சொல்லி வருகிறார்கள் என்றும் இந்தியா முழுவதும் ஒரு திட்டம் செயல்பட்டால் தமிழகம் மட்டும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்றும் தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும் போது அதற்குள் இருக்கும் தமிழகம் எப்படி ஒரு நாடாக இருக்க முடியும்? என்றும் எனவே தமிழகம் என்று சொல்வது தான் சரியானது என்றும் தமிழகம் பாரதத்தின் அடையாளம் என்றும் பேசினார்.
கவர்னரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திமுக எம்பி டிஆர் பாலு இது குறித்து பேசிய போது, ‘தமிழ்நாடு வளர்ந்து விட்டதே என்ற ஆத்திரத்தில் ஆளுநர் இவ்வாறு பேசுகிறார் என்றும் தமிழ், தமிழ்நாடு, தமிழர் ஆகிய மூன்று வார்த்தைகளை கேட்டால் அவருக்கு கோபம் வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
திராவிடம் என்ற சொல்லை பார்த்து இவருக்கு ஏன் வயிறு எரிகிறது என்று எனக்கு தெரியவில்லை என்றும் திராவிடம் என்ற சொல் எதனால் அவருக்கு சுடுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சமூகத்தின் சமூகத்தில் பெண் குலத்தை மூலையில் முடக்கி இழிவுபடுத்தியது திராவிடம் அல்ல, ஆரியம் என்று கூறிய டி.ஆர்.பாலு, பிரிவினைக்கு எதிராக கண்ணீர் வடிக்கும் கவர்னர் ஆரியத்தை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டுமே தவிர திராவிடத்தை எதிர்த்து அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய பிகார் உத்தரப் பிரதேச மாநிலம் இன்று எப்படி இருக்கிறது என்பதையும் அதேபோல் தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்பதையும் கவர்னர் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றும் தமிழ் நாட்டின் வளர்ச்சியை தமிழ் மக்கள் அறிந்து உள்ளார்கள் என்றும் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில் தமிழ்நாட்டின் பங்கு 9.2 சதவீதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு பாஜக தலைவராக ஆசை இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக தலைவர் ஆகி அதன்பின் அவர் எந்த விதமான அபத்தங்களையும் பேசட்டும் என்று அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பதவியில் இருந்துகொண்டு சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆளுநர் மற்றும் டிஆர் பாலுவின் இந்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.