இந்தியா
ஜே.ஈ.ஈ தேர்வுக்கு எதிராக திடீரென கொந்தளித்த மாணவர்கள்.. என்ன காரணம்?
ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தத் தேர்வு தேதிக்கு எதிராக மாணவர்கள் கொந்தளித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்..ஐ.டி, ஐஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் சேர்வதற்காக மாணவர்கள் ஜே.ஈ.ஈ என்ற தேர்வை எழுதி வருகிறார்கள் என்பதும் இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அந்த மதிப்பெண்களை வைத்துக்கொண்டு கல்லூரிகளில் சேரலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு தமிழ் உள்பட சுமார் 10 இந்திய மொழிகளில் நடத்தப்படுகிறது என்பதும் ஆங்கிலத்திலும் தேர்வு எழுத வசதி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே.ஈ.ஈ தேர்வு தேதி குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. டிசம்பர் 16ஆம் தேதி முதல் இந்த தேர்வுக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் பணி தொடங்கப் பட்ட நிலையில் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜே.ஈ.ஈ தேர்வு முதல் கட்டமாக ஜனவரி 24 முதல் 31 வரை நடைபெறும் என்றும் இடையிலுள்ள குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி மட்டும் தேர்வு நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோல் இரண்டாவது கட்ட தேர்வு ஏப்ரல் 6, 8, 10, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் இந்த இரண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் மாணவர்கள் எந்த தேர்வில் பெற்றுக் கொள்கிறார்களோ அதன்படி தர வரிசைப்படி கல்லூரி சேர்ந்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல் கட்ட தேர்வான ஜனவரி 24 அன்று தொடங்கும் தேர்வு தேதியை தான் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜனவரி மாதம் தாங்கள் பொதுத் தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஜே.ஈ.ஈ தேர்வுக்கும் சேர்த்து எங்களால் தயாராக முடியாது என்றும் எனவே ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கூறி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் JEEAfterBoards என்ற ஹேஸ்டேக் இப்போது இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இதுவரை தேர்வு தேதியை மாற்றுவது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் இனிமேலாவது தேர்வு தேதியை மாற்றி, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.