வணிகம்
பெப்சி, கோகோ கோலாவுக்கு போட்டியாக களமிறங்கும் அம்பானி!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் குஜராத்திலிருந்து செயல்பட்டு வரும் சோஸ்யோ ஹஜூரி பீவரேஜஸ் நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகளை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் குளிர்பான சந்தையில் பெப்ஸி, கோகோ கோலா நிறுவனங்கள் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியதிலிருந்து சிறிய அளவில் செயல்பட்டு வந்த கோலி சோடா நிறுவனங்கள் முதல் லவ் ஒன் உள்ளிட்ட பல்வேறு குளிர்பான நிறுவனங்கள் காணாமல் போயின.
இப்போது அதை எல்லாம் மீட்டு எடுக்கும் விதமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 100 வருடங்கள் பழமையான சோஸ்யோ ஹஜூரி பீவரேஜஸ் நிறுவனத்தில் முதலீடுகளைச் செய்ய உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2022-ம் ஆண்டு டெல்லியிலிருந்து செயல்பட்டு வரும் கம்பா கோலா நிறுவனத்தை 22 கோடி ரூபாய்க்கு வாங்கி அதில் புதிய ஓலா, ஆரஞ்ச், லெமன் குளிர்பானங்களை அறிமுகம் செய்தது.
இப்போது குளிர்பானங்கள் சந்தையை மேலும் தங்கல் வசம் படுத்தும் விதமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சோஸ்யோ ஹஜூரி பீவரேஜஸ் நிறுவனத்தில் முதலீட்டைச் செய்கிறது.
100 வருடம் பழமையான சோஸ்யோ ஹஜூரி பீவரேஜஸ் குஜராத்தில் 29 சதவிகித குளிர்பான சந்தையைத் தன்வசம் வைத்துள்ளது. 18 குளிர்பான உற்பத்தி ஆலைகளை வைத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதன் தயாரிப்புகள் விற்கப்படுவது மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது.
ரிலையன்ஸ் இந்த நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகளை வாங்குவதன் மூலம் இந்தியாவின் தேசிய குளிர்பான பிராண்டாக சோஸ்யோ உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.