இந்தியா
ஆன்லைனில் டாக்டரை தேடிய டெலிவரி பாய்.. திடீரென மாயமாய் மறைந்த ரூ.56,000 பணம்!
ஆன்லைனில் டாக்டரை தேடிய உணவு டெலிவரி பாய் ஒருவர் திடீரென 56 ஆயிரம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனை என்பது எந்த அளவிற்கு வங்கி வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக உள்ளதோ, அதே அளவுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ஏராளமான ஆபத்தும் உள்ளது என்பதும் ஒரு சிறு தவறு செய்தால் கூட நம்முடைய வங்கிக் கணக்கில் உள்ள அனைத்து பணமும் பறிபோய் விடும் என்பதையும் பல உதாரணங்கள் மூலம் பார்த்து வருகிறோம்.
ஆன்லைனில் தற்போது விதவிதமான முறைகளில் மோசடிகள் நடைபெறுவதால் மோசடியான நடைமுறை எது? உண்மையான நடைமுறை எது? என்பதை கண்டறிவது அனுபவம் உள்ளவர்களுக்கே பெரும் சவாலாக உள்ளது.
வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் நம்பிக்கையற்ற எண்களில் இருந்து வரும் மெசேஜில் உள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் அவசர நேரத்தில் தெரியாமல் மொபைல் போனுக்கு வரும் லிங்க்கை கிளிக் செய்துவிட்டால் ஒட்டுமொத்த வங்கியில் உள்ள சேமிப்பு காலியாகி விடும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட உணவு டெலிவரி நபர் ஒருவர் ஆன்லைனில் டாக்டரை தேடியபோது தனது வங்கி கணக்கில் உள்ள ரூ.56,000ஐ இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மிரா பயாந்தர் என்ற பகுதியை சேர்ந்த 32 வயது உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் தனக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் பெற ஆன்லைனில் நம்பரை தேடியுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும் அந்த அழைப்புக்கு டாக்டரின் அப்பாயிண்ட்மெண்ட் வேண்டுமென்றால் தான் அனுப்பும் லிங்கை கிளிக் செய்யவும் என்றும் கூறப்பட்டது. மேலும் வங்கி கணக்கில் இருந்து ரிஜிஸ்டர் கட்டணமாக ரூபாய் 10 மட்டும் ஜிபேமூலம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனை நம்பிய ஆன்லைன் டெலிவரி பாய் தனது மொபைல் போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்து, வங்கி விவரங்களையும் பதிவு செய்து கூகுள் அக்கவுண்ட் மூலம் ரூ.10 அனுப்பி உள்ளார்.
அவர் அனுப்பிய அடுத்த ஒரு சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 56 ஆயிரம் ரூபாய் திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஃபிஷ்ஷிங் எனக் கூறப்படும் இதுபோன்ற ஆபத்தான லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என காவல்துறையினர் மற்றும் ரிசர்வ் வங்கி அடிக்கடி அறிவுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.