தமிழ்நாடு
ஆடை சுதந்திரம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டரில் பதில்!
ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் முகத்தை மூடிக்கொண்டு புர்கா அணிந்திருந்தது சமூக வலைதளங்களில் விமர்சனத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆடை சுதந்திரம் தொடர்பாகத் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார்.
ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதுகளை பெற்று 10 ஆண்டுகள் நிறைவாகியுள்ளதைக் கொண்டாடுவதற்கான விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டனர். அப்போது கதீஜா ரஹ்மான் தனது தந்தை குறித்து மிகவும் பெருமையாக, உணர்ச்சிகரமாக பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ரஹ்மானின் மகள் முகத்தை மூடிக்கொண்டு புர்கா அணிந்திருந்தார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் பழைமைவாதத்தை கடைப்பிடிக்கிறார் என்று பலரும் குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து இதற்கு பதிலளிக்கும் விதமாக, நிதா அம்பானியுடன் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி மற்றும் மகள்கள் நிற்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான், எனது குடும்பப் பெண்கள் நிதா அம்பானியுடன் இருந்தபோது என்று கேப்ஷன் கொடுத்து அவரவர் ஆடையைத் தேர்வு செய்துகொள்வதற்கான சுதந்திரம் அவரவர்க்கு உண்டு என ஹேஷ்டேகில் தெரிவித்திருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டிருந்த புகைப்படத்தில் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி ஒவ்வொரு ஆடை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.