தமிழ்நாடு
தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற தினகரன் வரவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட தங்கள் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யதார்.
இந்த வழக்கு கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரனின் அமமுக கட்சி பதிவு செய்யப்படாத அரசியல் கட்சி எனவே அவர்களுக்கு நிரந்தர சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடப்பட்டது.
ஆனால் இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்களால் அமமுகவை பதிவு செய்ய இயலாது எனவும் தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியும் என்கிற வகையிலும் தினகரன் தரப்பு கூறியுள்ளது. இதனையடுத்து இரு தரப்பினரும் தங்கள் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்குவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் உள்ள இரட்டை இலை சின்னம் வழக்கை 4 வாரங்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும். ஒரு வேளை 4 வாரங்களுக்குள் இரட்டை இலை வழக்கில் தீர்ப்பு வழங்காத பட்சத்தில், ஏதேனும் தேர்தல் அறிவிப்பு வந்தால், அந்த தேர்தலை கருத்தில் கொண்டு தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.