இந்தியா
ரயில் டிக்கெட்டை டுவிட்டரில் பதிவு செய்த பெண்.. ரூ.64 ஆயிரம் இழந்த அதிர்ச்சி சம்பவம்!
டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நம்முடைய கருத்துக்களை பகிர்வதற்காக அமைக்கப்பட்டிருந்தாலும் சில விஷயங்களைப் பகிர கூடாது என்றும் குறிப்பாக தனிப்பட்ட விவரங்களை சமூக வலைத் தளங்களில் பகிர கூடாது என்றும் ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் டுவிட்டரில் தனது ரயில் டிக்கெட்டை பதிவு செய்த ஒரு பெண் ரூபாய் 64,000 இந்த அதிர்ச்சி சம்பவம் மும்பையில் நடந்து உள்ளது.
மும்பையை சேர்ந்த மீனா என்பவர் புஜ் செல்வதற்காக மூன்று டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்திருந்தார். அவருக்கு RAC டிக்கெட் கிடைத்து இருந்த நிலையில் படுக்கை வசதி கொண்ட டிக்கெட் வேண்டும் என்பதற்காக அவர் ஐஆர்சிடிசி யின் டுவிட்டர் பக்கத்தில் தனது டிக்கெட் விவரங்களையும் தனது மொபைல் போன் எண்ணையும் பதிவு செய்து இருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. தாங்கள் ஐஆர்சிடிசி வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாகவும் உங்களுடைய RAC டிக்கெட்டை பெர்த் டிக்கெட் ஆக மாற்றி தருகிறோம் என்றும் கூறியுள்ளனர். டுவிட்டரில் பதிவு செய்த சிறிது நேரத்தில் பதில் வந்திருப்பதால் ஐஆர்சிடிசி வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்துதான் பதில் வந்தது என மீனாவும் அவரது மகனும் நினைத்தனர்.
போனில் பேசிய நபர் மீனாவின் மொபைல் போனுக்கு ஒரு லிங்கை அனுப்புவதாகவும் அந்த லிங்கை கிளிக் செய்து விவரங்களை பதிவு செய்து ரூபாய் இரண்டு மட்டும் கூகுள்பே மூலம் அனுப்பினால் அவர்களது RAC டிக்கெட்டுக்களை பெர்த் டிக்கெட் ஆக மாற்ற முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கொஞ்சம் கூட யோசிக்காமல் மீனா மற்றும் அவரது மகன் அந்த லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள விவரங்களை நிரப்பி கூகுள் பே மூலம் இரண்டு ரூபாய் அனுப்பி உள்ளனர். இந்த விவரங்களை பூர்த்தி செய்த ஒரு சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 64 ஆயிரத்து 11 மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
ஐஆர்சிடிசி டுவிட்டர் பக்கத்தில் புகார் செய்யப்பட்டதால், புகார் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் அழைப்பு வந்ததால் ஐசிசியின் வாடிக்கையாளர் சேவையில் இருந்து தான் வந்ததாக நினைத்து இதனை செய்ததாகவும், ஆனால் இப்படியே ஏமாறுவோம் என்று நினைக்கவில்லை என்றும் கூறி மீனா வருத்தத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது காவல் நிலையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
எப்போதுமே ஐஆர்சிடிசி ஆன்லைனில் பணம் அனுப்ப கோரிக்கை விடாது என்பதை புரிந்துகொண்டு இந்த சம்பவத்திலிருந்து மற்றவர்கள் ஆன்லைன் மூலம் வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்கள். அதேபோல் தனிப்பட்ட தகவல்களை சமூக வலைதளங்களில் நிச்சயமாக பதிவு செய்யக்கூடாது என்றும் அவ்வாறு பதிவு செய்தால் நாம் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.