உலகம்
கடன் காரர்களிடம் இருந்து தப்பிக்க இறந்தது போல் போலி புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்த பெண்
கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பிக் கொடுக்காமல் சமாளிக்க பல்வேறு தந்திரங்களை செய்து வருவார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் இந்தோனேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க தான் இறந்து போனதாக பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவு செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசியாவை சேர்ந்த லிசா தேவி பிரமிதா என்ற பெண் பலரிடம் கடன் வாங்கிவிட்டு அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிர்த்துள்ளார். இதனை அடுத்து கடன்காரர்கள் தங்கள் பணத்தை கொடுக்குமாறு நெருக்கடி கொடுக்க அவர் சிறிது காலம் அனைவரிடமும் அவகாசம் கேட்டுள்ளார்.
அதன்பிறகு லிசா தேவி பிரமிதா தனது மகளின் உதவியுடன் தான் இறந்து விட்டதாக பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவு செய்தார். இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பார்த்த அவருக்கு கடன் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்து லிசா தேவி பிரமிதா இறந்து விட்டதால் தான் தங்களது பணம் முழுவதும் இழந்து விட்டதாக அவர்கள் நினைத்தனர்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு 22 ஆயிரம் கடன் கொடுத்த குணவன் என்பவர் அவரது மகளிடம் தாயின் மரணம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது தனது தாயின் உடல் நெடுந்தொலைவில் உள்ள சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 11-ஆம் தேதி அவர் இறந்து விட்டதாகவும் அவரது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பதாகவும் அவரது மகள் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அந்த பெண்ணின் இறப்பில் சந்தேகம் அடைந்த கடன் கொடுத்த குணவன் அவரது முகநூல் தொடர்ச்சியாக பார்த்து வந்த போது அவரது பிணம் குறித்த புகைப்படம் போட்டோஷாப் மூலம் பதிவு செய்யப்பட்ட போலியான புகைப்படம் என்பதை கண்டுபிடித்தார். அதே போன்ற சில புகைப்படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்றும், அதில் லிசா தேவி பிரமிதா முகத்தை மட்டும் மாற்றி பிணம் போல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.
இதனை அடுத்து லிசா தேவி பிரமிதா மகளை கடன் கொடுத்தவன் மிரட்டிய நிலையில் அந்த சிறுமி தனது தாய் சாகவில்லை என்றும் தலைமறைவாக உள்ளார் என்று ஒப்புக்கொண்டார். இப்போது கடன் கொடுத்தவர்கள் அந்த பெண்ணை மீண்டும் தேடி வருகின்றனர். கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க தான் இறந்துவிட்டதாக புகைப்படத்தை பதிவு செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.