தமிழ்நாடு
ரூ.115 கோடி மதிப்பில் 10 புதிய பேருந்து நிலையங்கள்.. எந்தெந்த நகரங்களில் தெரியுமா?
தமிழகத்தில் 115 கோடி ரூபாய் மதிப்பில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு அதற்காக ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை உள்பட பல நகரங்களில் நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிலையங்கள் இருந்தாலும் அடுத்த கட்ட நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்கள் மிகவும் மோசமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்ட 115 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் அமைக்கப்பட இருக்கும் புதிய பேருந்து நிலையங்களில் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், கூடலூர், அரியலூர், கடலூர், வேலூர், வேதாரண்யம், புதுக்கோட்டை, குளச்சல் மற்றும் பொள்ளாச்சி ஆகிய 10 நகரங்களில் 10 புதிய பேருந்து நிலையங்களுக்கான இடம் மற்றும் அனுமதி தரப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து விரைவில் பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் திருப்பூரில் 26 கோடி ரூபாய் செலவிலும் ஓசூரில் 30 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் அதே போல் மற்ற நகரங்களிலும் நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு பட்ஜெட் தொடரில் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.