இந்தியா
காந்தியை மீண்டும் சுட்டுக் கொண்டாடி சர்ச்சை: இந்து மகா சபை அட்டூழியம்!
மகாத்மா காந்தியை 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி நாதுராம் கோட்சே எனபவர் சுட்டுக்கொன்றார். தேச பிதா என புகழப்படும் காந்தியின் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
ஆனால் இதனை இந்து மகா சபை போன்ற இந்து அமைப்புகள் சில கொண்டாடி வருகின்றது. இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலம், அலிகாரில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தின் முன் நேற்று தயார் செய்து வைக்கப்பட்ட காந்தியின் உருவ பொம்மையை இந்து மகா சபை அமைப்பின் செயலாளரான பூஜா சகுன் பாண்டே பொம்மைத் துப்பாக்கி மூலம் சுடுகிறார்.
காந்தியின் உருவ பொம்மையில் ஏற்கனவே ரத்தம் போன்ற திரவம் உள்ளே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. பூஜா சகுன் பாண்டே சுட்டதும், அந்தத் திரவம் காந்தியின் உருவ பொம்மையில் இருந்து ரத்தம் போல் வழிகிறது. பின்னர் காந்தியின் உருவ பொம்மையை அவர்கள் எரித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை கொண்டாடும் வகையில் கோட்சேவின் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகளும் வழங்கப்பட்டது. காந்தியின் நினைவு நாளில் இந்து மகா சபையின் இந்தச் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.