இந்தியா
சென்னையை நோக்கி நகர்கிறதா காற்றழுத்த தாழ்வு? கனமழைக்கு வாய்ப்பு!
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு வரும் 5ஆம் தேதி உருவாகும் என்றும் அது வட தமிழகத்திற்கு அதாவது சென்னை நோக்கி நகர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும் டிசம்பர் 5ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, புயலாக வலுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து 8ஆம் தேதி தமிழகம் புதுவை மற்றும் அதை ஒட்டிய தெற்கு கடலோர பகுதியில் கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சென்னைக்கு அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் புதுவை மற்றும் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி இருக்கும் நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீண்டும் சென்னையில் மழை பெய்யும் என்ற கணிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.