இந்தியா
205 கிலோ வெங்காயத்தை 415 கிமீ எடுத்து சென்ற விவசாயி.. கிடைத்ததோ வெறும் ரூ.8.36
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 205 கிலோ வெங்காயத்தை 415 கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்று விற்பனை செய்த நிலையில் அவருக்கு கிடைத்தது வெறும் ரூ.8.36 என்ற தகவல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தான் என்றும் விவசாயம் இல்லாமல் இந்தியாவின் வர்த்தகமே இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு தகுந்த விலை கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் பயிரிட்ட 205 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்வதற்காக தலைநகர் பெங்களூர் அருகே உள்ள யஷ்வந்த்பூர் சந்தைக்கு எடுத்துச் சென்றார்.
205 கிலோ வெங்காயத்தை மொத்த விலைக்கு அவர் விற்பனை செய்யும் போது குவிண்டாலுக்கு வெறும் ரூபாய் 200 மட்டுமே விலையை நிர்ணயம் செய்த மொத்த வியாபாரிகள் அவருடைய வெங்காயத்துக்கு 410 ரூபாய் என கணக்குப் போட்டு உள்ளனர். இதனை அடுத்து சரக்குக் கட்டணம் மற்றும் கூலி கட்டணம் ஆகியவை கழித்தது போக அவருக்கு வெறும் ரூ.8.36 மட்டுமே கையில் கிடைத்துள்ளது.
இந்த ரசீதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வெறும் ரூ.8.36 காசுக்காக 415 கிலோமீட்டர் பயணம் செய்து வந்து உள்ளேன் என்றும் தயவு செய்து யாரும் இந்த சந்தையில் விற்பனை செய்ய வரவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். அவர் தனது நிலத்தில் வெங்காயத்தை பயிரிட ரூபாய் 25 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் வந்த நிலையில் வெறும் ரூ.8.36 கிடைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை கண்ட நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்தியில் மற்றும் மாநிலத்தில் பாஜக ஆட்சி இருக்கும் நிலையில் இது தான் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டமா? என விமர்சனம் செய்துள்ளனர். இந்த நிலையில் விவசாயிகள் தங்கள் விளைச்சலுக்கு குறைந்தபட்ச விலையை அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து போராட்டம் நடத்தவும் அவர்கள் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.