தமிழ்நாடு
நிர்மலா தேவி பரபரப்பு புகார்: சிபிசிஐடி போலீசார் மிரட்டி வாக்குமூலம் பெற்றனர்!
கல்லூரி மாணவிகளை பாலியல் வழிக்கு அழைத்த அருப்புகோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து வரப்பட்டார் நிர்மலா தேவி.
அப்போது பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் நிர்மலா தேவி, தனது ஒப்புதல் வாக்குமூலம் தவறானது எனவும், சிபிசிஐடி காவல்துறையினர் தன்னை சிறையில் மிரட்டி வாக்குமூலம் பெற்றதாகவும், தனக்கு ஜாமின் வழங்க பல இடையூறுகள் இருப்பதாகவும், இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நிர்மலா தேவி இதுவரை பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை. இன்றுதான் முதன்முதலாக சந்தித்து இந்த பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை முழுமையாக பேசவிடாமல் வாயை பொத்தி கடுமையாக நடந்துகொண்டு வேகமாக கையைப்பிடித்து இழுத்துச்சென்றுவிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.