சினிமா செய்திகள்
இளையராஜா 75 திட்டமிட்டபடி நடக்குமா?
இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சிக்கு விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்நிலையில், இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி தயாரிப்பாளர் ஜே. சதீஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், நிகழ்ச்சியின் செலவு குறித்த தெளிவான அறிக்கை ஏதும் இல்லை எனக் கூறினர். மேலும், நிகழ்ச்சியை ஏன் தள்ளி வைக்கக் கூடாது என்றும் கேள்விகளை அடுக்கினர். இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் சங்க சார்பாக வாதாடும் வழக்கறிஞர், நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து விட்டதால், நிகழ்ச்சியை தள்ளி வைக்க முடியாது என்றார்.
அவரது கருத்தைக் கேட்ட நீதிபதிகள், நாளை இசை நிகழ்ச்சிக்கு ஆகும் மொத்த வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர்.
இதனால், திட்டமிட்டபடி இளையராஜா 75 இசை நிகழ்ச்சி நடக்குமா நடக்காதா என்ற குழப்பம் கோலிவுட்டில் எழுந்துள்ளது. நாளைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தான் இசை நிகழ்ச்சி நடக்குமா என்பது தெரிய வரும்.