தமிழ்நாடு
மத்திய அரசின் உதவியுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டுக் கொள்ளை: விளாசும் ஸ்டாலின்!
![OPS and EPS - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/OPS-and-EPS-1.jpg)
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அதனை முன்னிட்டு திமுக தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து வருகின்றனர். இந்த ஊராட்சி சபை கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்று பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டங்களில் திமுக பொருளாளர் துரைமுருகன் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, ஈபிஎஸ்-ம் ஓபிஎஸ்-ம் ஒன்றுசேர்ந்து கூட்டுக் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கு மத்திய அரசு உதவிக்கொண்டிருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்க 117 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால், அதிமுகவிடம் இருப்பதோ 113 தான். ஆக, மைனாரிட்டி அரசை நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்றார் மு.க.ஸ்டாலின்.
மேலும், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்னும் 10 நாட்களில் வரப்போகிறது. வந்தவுடன் இந்த ஆட்சி கவிழப்போகிறது. தற்போது லஞ்சம் கொடுத்து எம்எல்ஏக்களைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார் ஸ்டாலின்.