தமிழ்நாடு
அதிமுக தலைமையில் கூட்டணி, 40 தொகுதிகளையும் வெல்வோம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால் அதிமுக, பாஜக கூட்டணி அமையுமா? அமையாதா? என்ற குழப்பம் நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது.
அதிமுக, பாஜக இடையே மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறினாலும் இரு கட்சியின் தலைமையும் அதிகாரப்பூர்வமாக இன்னமும் கூட்டணி உண்டு அல்லது இல்லை என்று அறிவிக்கவில்லை. எனவே கடைசி நேரத்தில் பாஜக, அதிமுக கூட்டணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனையடுத்து மதுரை வந்த பிரதமர் மோடியும் கூட்டணி குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.
இந்நிலையில் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூட்டணி குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், கூட்டணி அமையும் சூழலில் அதிமுகதான் அதன் தலைமையை ஏற்கும் என்றார். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் அதிமுக மத்தியில் மிகப்பெரிய ஒரு சக்தியாக விளங்கும். கடந்த முறை 37 தொகுதிகளில் வென்றோம். இந்தமுறை நாற்பதுக்கு நாற்பதையும் வெல்வோம். 40 தொகுதிகளையும் வெல்லும்போது அதிமுக மத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றார்.