கிரிக்கெட்
3-வது போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டி தொடர்களில் விளையாட உள்ளது. அதில் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக வென்று மூன்றாவது போட்டியில் இன்று களமிறங்கியது.
வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும் ராஸ் டெய்லர் மற்றும் லாதம் ஆகியோர் சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கையை தந்தனர்.
கேப்டன் வில்லியம்சன் 28 ரன்னில் வெளியேறினார். இவர்கள் மூவரையும் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் பொறுப்பில்லாமல் சொதப்ப அந்த அணியால் 250 ரன்களை கூட கடக்க முடியவில்லை. இறுதியில் நியூசிலாந்து அணி 49-வது ஓவரில் 243 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ராஸ் டெய்லர் 93 ரன் எடுத்து 7 ரன்னில் சதத்தை தவற விட்டார். லாதம் 51 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், சாஹல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 28 ரன்னில் வெளியேற ரோஹித், கோலி ஜோடி பொறுப்புடன் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். ஆனால் இந்திய அணி 152 ரன் எடுத்திருந்தபோது ரோஹித் ஷர்மாவும், 168 ரன் எடுத்திருந்தபோது கோலியும் அவுட் ஆகினர். இதனையடுத்து களமிறங்கிய ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் போட்டியை வெற்றியுடன் முடித்து வைத்தனர்.
இந்திய அணி 43-வது ஓவரில் வெற்றி இலக்கை மூன்று விக்கெட் இழப்பிற்கு எட்டியது. இதன் மூலம் இந்திய அணி 42 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் ரோஹித் ஷர்மா 62 ரன்னும், கோலி 60 ரன்னும், ராயுடு 40 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று முன்னிலையில் உள்ளது. ஆட்ட நாயகன் விருது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமிக்கு வழங்கப்பட்டது.